செய்திகள்
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

பென்னாகரம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2021-11-21 09:38 GMT   |   Update On 2021-11-21 09:38 GMT
பென்னாகரம் அருகே குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கரியம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன். விவசாயி. இவருடைய மகன் அஸ்வின் (வயது 8). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அஸ்வின் தனது அண்ணன் அகிலன் மற்றும் நண்பர்களுடன் கரியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கசென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவன் தண்ணீரில் மூழ்கினான். நீண்ட நேரமாகியும் அஸ்வின் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அகிலன் மற்றும் நண்பர்கள் மேலே வந்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கிணற்றுக்கு வந்தனர். கிணற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்ததால் இதுகுறித்து அவர்கள் பென்னாகரம் தீயணைப்பு நிலையத்திற்கும், அகிலனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து சிறுவனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News