செய்திகள்
கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் சேதங்கள் தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர்.

4 மாவட்டங்களில் இன்று மத்தியக்குழு ஆய்வு- மழை, வெள்ள சேதங்களை நேரில் பார்த்தனர்

Published On 2021-11-22 10:17 GMT   |   Update On 2021-11-22 10:17 GMT
சென்னையில் வெள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வுகளை முடித்த மத்திய குழுவினர் புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டனர்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. ஏராளமான பயிர்கள் அழுகிவிட்டது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வயல்வெளிகளில் மணல் குவிந்து விட்டது.

சென்னை மற்றும் புறநகரில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து அதிக பொருட்சேதத்தை ஏற்படுத்தி விட்டது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார்.

அவரது உத்தரவின் பேரில் அமைச்சர்கள் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து பயிர் சேதம் குறித்த அறிக்கையை அளித்தனர். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவை டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் டி.ஆர்.பாலு எம்.பி. வழங்கினார்.

அதில் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.550 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வெள்ள சேதங்களை பார்வையிட 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்த மத்திய குழுவினர் நேற்று மதியம் 1 மணியளவில் சென்னை வந்தனர். பிற்பகல் 3.30 மணிக்கு தலைமைச் செயலகம் சென்றனர்.

அங்கு தலைமைச் செயலாளர் இறையன்பு, பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேத விவரங்களை விரிவாக எடுத்து கூறினார்கள்.

அதன் பிறகு சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு (ரிப்பன் மாளிகை) மத்திய குழுவினர் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ள சேத பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர். மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை மத்திய குழுவினருக்கு விளக்கி கூறினார்.

இதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் இரு பிரிவாக பிரிந்து சென்று இன்றும் நாளையும் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிடுகின்றனர்.

உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான முதல் குழுவில் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறை இயக்குனர் விஜய்ராஜ்மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அதிகாரி ராணஞ்சாய்சிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலாளர் எம்.வி.என். வரபிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.



இந்த குழுவினர் இன்று காலை சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். வடசென்னையில் வீரா செட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புரசைவாக்கம் அழகப்பா ரோடு, கொளத்தூர் சிவ இளங்கோ சாலை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்று விளக்கி கூறினார்கள்.

சென்னையில் வெள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வுகளை முடித்த மத்திய குழுவினர் புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டனர்.

பஞ்சாயத்துராஜ் சிறப்பு அதிகாரி அமுதா, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் மத்திய குழுவினருக்கு வெள்ள சேத பாதிப்புகளை விரிவாக எடுத்து கூறினார்கள்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் மகாபலிபுரம் வழியாக புதுச்சேரி சென்றுள்ளனர்.

இந்த குழுவினர் நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு நாளை இரவு சென்னை திரும்புகின்றனர்.

மத்திய குழுவின் மற்றொரு அணி சென்னையில் இருந்து நேராக விமானம் மூலம் தூத்துக்குடி சென்றனர்.

இந்த குழுவில் மத்திய நிதி அமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல், நீர்வள அமைச்சக இயக்குனர் ஆர்.தங்கமணி, எரிசக்தி அமைச்சக உதவி இயக்குனர் பவ்யா பாண்டே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி சென்று அங்கு வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டனர்.

இன்று இரவு தூத்துக்குடியில் தங்கி விட்டு நாளை காலை விமானத்தில் சென்னை வந்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.

இதையடுத்து 24-ந்தேதி காலை 10 மணிக்கு மத்திய குழுவின் இரு அணியினரும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு அன்று மாலை டெல்லி செல்கின்றனர்.


Tags:    

Similar News