செய்திகள்
தூத்துக்குடி அருகே ரெயில் தண்டவாள பகுதியில் இரும்பு பொருட்கள் திருடியவர் கைது
தூத்துக்குடி அருகே ரெயில் தண்டவாள பகுதியில் இரும்பு பொருட்கள் திருடியவரை போலீசார் கைது செய்து தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படையினர் தூத்துக்குடி முதல் வாஞ்சி மணியாச்சி வரையிலான ரெயில் வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது ரெயில் வழித்தடங்களில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ரெயில்கள் இயக்கப்படாததை பயன்படுத்தி தண்டவாளங்களில் உள்ள இரும்புபொருட்கள் திருடப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரும்புபொருட்களை திருடியவர்களை கைது செய்ய தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மாறுவேடங்களில் சென்று தூத்துக்குடி- வாஞ்சிமணியாச்சி வரையிலான ரெயில் வழித்தடப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது, தட்டப்பாறை பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் இரும்புபொருட்களை திருடிய மர்மநபரை பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர், தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த இசக்கிவேல் (வயது 45) என்பது தெரியவந்தது. அந்த நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ரெயில்வே இரும்பு பொருட்களை வாங்கிய தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த இரும்புக்கடை உரிமையாளர் அய்யப்பன் (43) என்பவரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.