செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

அறந்தாங்கி அருகே மரத்தில் கார் மோதி ஒருவர் பலி- 3 பேர் காயம்

Published On 2019-11-13 10:05 GMT   |   Update On 2019-11-13 10:05 GMT
அறந்தாங்கி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 55). இவரது மனைவி வெண்ணிலா. இவர்களது மகன் ஸ்டாலின் (35). இவர்கள் இன்று காலை காரில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். காரை ஸ்டாலின் ஓட்டினார்.

அறந்தாங்கி அருகே கூத்தன்குடி பகுதியில் செல்லும் போது அந்த வழியாக மணமேல்குடியில் இருந்து அறந்தாங்கி நோக்கி மோட்டார் சைக்கிளில் நடேசன் (35) என்பவர் வந்தார். எதிர்பாராத விதமாக காரும், மோட்டார் சைக்கிளும் மோதின. இதில் நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி , சாலையோரமுள்ள மரத்தில் மோதியதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

காரில் இருந்த ஸ்டாலின், பாக்கியராஜ், வெண்ணிலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த நடேசனும் காயமடைந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காருக்குள் சிக்கிய 3பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது பாக்கியராஜ் பலத்த காயமடைந்து காருக்குள்ளேயே இறந்து கிடந்தார்.

இதையடுத்து மற்ற 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நடேசனையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த பாக்கியராஜ் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இருப்பினும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News