தொழில்நுட்பம்
இந்தியாவில் ஐபோன்கள் விலை விரைவில் குறைப்பு?
ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐபோன்கள் விலை இந்தியாவில் விரைவில் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐபோன் மாடல்கள் இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் உருவாக்கப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் ஐபோன்கள் அடுத்த மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரயிருப்பதாக தற்சமயம் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஐபோன் விற்பனைக்கு சில அனுமதி பெற வேண்டியிருந்தாலும் ஐபோன் XR மற்றும் ஐபோன் XS மாடல்கள் ஆகஸ்டு மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஐபோன் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் அதிகளவு வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும் என்பதோடு, இங்கு சொந்தமாக விற்பனை மையங்களை கட்டமைக்க முடியும்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு அதிகளவு வரவேற்பு இருக்கிறது என்றபோதும், அதிக விலை காரணமாக இதன் விற்பனை குறைவாகவே இருக்கிறது.
தமிழ் நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் X மாடல்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், பெங்களூருவில் விஸ்ட்ரன் கார்ப் நிறுவனம் ஐபோன் எஸ்.இ., ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 7 மாடல்களை உற்பத்தி செய்கின்றன.
முன்னதாக கனாலிஸ் எனும் ஆய்வு நிறுவன தலைவர் ருஷப் தோஷி வெளியிட்ட தகவல்களில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால் ஐபோன்களின் விலை குறைக்கப்படலாம் என தெரிவித்தார்.