செய்திகள்
பவானி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
பவானி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பவானி:
பவானி காலிங்கராயன்பாளையம் அடுத்துள்ள எலவமலையை சேர்ந்தவர் மெய்நாதன் (வயது 40). இவருடைய மனைவி மோகனாம்பாள் (35) இவர்கள் இருவரும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மோனாம்பாள் விஷம் குடித்துவிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மோகனாம்பாள் இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.