உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி இன்று திறப்பு

Published On 2022-01-12 10:22 GMT   |   Update On 2022-01-12 10:22 GMT
அரியலூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரியை இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

அரியலூர்:

அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் தொர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அப்போதைய முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அதைத்தொடர்ந்து 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில்  அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கின.

இங்கு, தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய நிர்வாக அலுவலகம், தரைத்தளம் மற்றும் 6 மாடிகளுடன் கூடிய கல்லூரி, வங்கி, அஞ்சல் நிலையம், மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கூடிய கட்டிடம்,

மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தரைத்தளம் மற்றும் 5 மாடிகள் கொண்ட கட்டிடம், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இதனிடையே, மருத்துவ கல்லூரிகளுக்கான மத்தியக்குழு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாட்டை தொடங்க அனுமதி அளித்தது.

இதன்படி, இந்த மருத்துவக்கல்லூரி உட்பட தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.

நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால் அரியலூர் மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News