செய்திகள்
கைது

புதுக்கடை அருகே தலையில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை- நண்பர் கைது

Published On 2019-09-16 10:16 GMT   |   Update On 2019-09-16 10:16 GMT
புதுக்கடை அருகே மது போதையில் தலையில் கல்லால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள காப்பிக்காடை அடுத்த மாறாயபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு குழந்தைகள் கிடையாது. கூலி தொழிலாளியான குமாருக்கு மது பழக்கம் இருந்து வந்தது.

அருகில் உள்ள ஆலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சாஜின் (22). கூலி தொழிலாளியான இவரும், குமாரும் வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்கள். வேலை முடிந்த பிறகு குமாரும், சாஜினும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அப்போது அவர்கள் இடையே அடிக்கடி வாய்த் தகராறும் ஏற்பட்டு வந்தது.

கடந்த 11-ந்தேதி இரவு 9 மணி அளவில் வழக்கம் போல குமாரும், சாஜினும் மாறாயபுரத்தில் வாய்க்கால் அருகே அமர்ந்து மது அருந்தினார்கள். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சாஜின் அருகில் கிடந்த கல்லை எடுத்து குமாரின் தலையில் தாக்கினார்.

இதனால் படுகாயம் அடைந்த குமார் ரத்த வெள்ளத்தில் வாய்க்காலில் விழுந்தார். உடனே சாஜின் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். மறுநாள் காலை அந்த வழியாக சென்றவர்கள் வாய்க்காலில் குமார் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி புதுக்கடை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு குமார் இறந்து விட்டார்.

இதுபற்றி புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக இருந்த சாஜினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் மது போதையில் நடந்த தகராறில் குமாரை கல்லால் அடித்து கொன்ற தகவலை தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News