செய்திகள்
இலுப்பூரில் குவிந்த அதிமுகவினர்

விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த அதிரடிப்படை போலீசார் குவிப்பு

Published On 2021-10-18 09:43 GMT   |   Update On 2021-10-18 09:43 GMT
விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
புதுக்கோட்டை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பிக்கு சொந்தமான இலுப்பூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள லாட்ஜ், இலுப்பூர் சவுராஷ் டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் சகோதரர் மகன் இளவரசனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் டாக்டர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.வினர் என இன்று காலையிலேயே ஏராளமானோர் திரண்டனர்.

இதனால் அந்த பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவித சம்பங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News