உள்ளூர் செய்திகள்
கூண்டு வைக்கப்பட்டு இருந்த இடம் அருகே வந்த சிறுத்தை.

4-வது நாளாக பிடிக்கும் பணி: கூண்டு வரை வந்து விட்டு திரும்பி செல்லும் சிறுத்தை பொறுமையுடன் காத்திருக்கும் வனத்துறையினர்

Published On 2022-01-20 04:14 GMT   |   Update On 2022-01-20 04:14 GMT
கடந்த 3 நாட்களுக்கும் மேலாக உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் குடோனில் இருக்க கூடிய 6 அறைகளிலும் ஒவ்வொரு அறையாக சென்று சுற்றி பார்த்து வருகிறது.

குனியமுத்தூர்:

கோவை பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று புகுந்தது. தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். முதலில் சிறுத்தை இருக்கும் குடோன் பகுதியை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குடோனில் இருந்து சிறுத்தை தப்பிக்க முடியாத வண்ணம் 3 கூண்டுகள் வைத்து, அதில் இறைச்சியை வைத்தனர். ஆனாலும் சிறுத்தை கூண்டின் அருகே வரவில்லை. இதையடுத்து வனத்துறையினர் உயிருடன் கூடிய 2 நாய்களை கொண்டு வந்து கூண்டுக்குள் கட்டி வைத்தனர்.

மேலும் குடோன் சுற்றுப் பகுதி மற்றும் மேல்பகுதிகளில் வலையை கட்டி சிறுத்தை எந்தவழியிலும் தப்பிக்க முடியாதபடி வியூகம் அமைத்தனர். இதனால் சிறுத்தை வெளியில் செல்லாமல் குடோனுக்கு உள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது.

கடந்த 3 நாட்களுக்கும் மேலாக உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் குடோனில் இருக்க கூடிய 6 அறைகளிலும் ஒவ்வொரு அறையாக சென்று சுற்றி பார்த்து வருகிறது.

இன்று 4-வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். வன உதவி அலுவலர் தினேஷ்குமார், ரேஞ்சர் சந்தியா தலைமையில் குடோனை சுற்றிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த வழியாக வேண்டுமானலும், எந்த நேரத்திலும் சிறுத்தை வெளியில் வர வாய்ப்புள்ளதால் உற்று நோக்கி கவனித்து வருகிறார்கள்.

சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய குடோனுக்குள் 6 கேமிராக்களை பொருத்தியுள்ளனர். அந்த கேமிராக்களை இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் சிறுத்தை தான் இருந்த இடத்தை விட்டு கூண்டு வைத்திருந்த பகுதிக்கு வந்தது.

பின்னர் கூண்டிற்குள் 2 அடி எடுத்து வைத்து இறைச்சியின் அருகே சென்ற சிறுத்தை சுதாரித்து கொண்டு மின்னல் வேகத்தில் மீண்டும் அறைக்குள் சென்று பதுங்கி கொண்டது. இதனால் சிறுத்தையை தானாக கூண்டில் சிக்குவதற்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

கடந்த 3 நாட்கள் இரவு பகலாக கூண்டு வைத்து காத்திருக்கிறோம். ஆனால் சிறுத்தை அகப்படாமல் போக்கு காட்டி வருகிறது. கூண்டுக்கு அருகே வரும் சிறுத்தை புத்திசாலிதனமாக அப்படியே திரும்பி செல்கிறது. இந்த சிறுத்தை, வனத்திலிருந்து மற்றொரு பலம் வாய்ந்த சிறுத்தையால் விரட்டப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் இந்த சிறுத்தை ஏற்கனவே கூண்டில் பிடிபட்டு வனத்தில் விடுவிக் கப்பட்ட சிறுத்தையாக இருக்கலாம் எனவும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

சிறுத்தை இருக்க கூடிய குடோன் முழுவதும் இருட்டாக உள்ளது. மேலும் அங்கு அதிகளவில் பீங்கான் பொருட்கள் உள்ளது. இதனால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. மயக்க ஊசி செலுத்தும்போது மயக்கம் அடையும் வரை சிறுத்தை ஆக்ரோ‌ஷத்துடன் அங்கும், மிங்கும் சுற்றிதிரியும் அந்த சமயம் சிறுத்தைக்கு பலத்த காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்கு எந்தஒரு இடையூறு இல்லை என்பதால் பொறுத்திருந்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்திருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News