செய்திகள்
சாலை மறியல்

சிதம்பரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2021-09-28 12:42 GMT   |   Update On 2021-09-28 12:42 GMT
சிதம்பரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.கே.தோட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதகாலமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் பலர் நேற்று காலி குடங்களுடன் அப்பகுதியில் ஒன்று திண்டனர். பின்னர் அவர்கள், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி சிதம்பரம்-சீர்காழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து நான் முனிசிபல் ஊராட்சி மன்ற தலைவரிடம் பேசி தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதனை ஏற்று பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News