செய்திகள்
கோப்பு படம்

நாகர்கோவிலில் காப்பகத்தில் இருந்து மாயமான 4 மாணவர்கள் மீட்பு - போலீசார் விசாரணை

Published On 2019-10-12 12:29 GMT   |   Update On 2019-10-12 12:29 GMT
நாகர்கோவில் காப்பகத்தில் இருந்து மாயமான 4 மாணவர்களை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் பெரிய விளையை சேர்ந்த அஜித் (வயது 15), நெல்லை மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்தவர் ராட்சிகர்சிங் (15), தக்கலையை சேர்ந்தவர் அஜய் (17), ஆகாஷ்ராயன் (17) ஆகிய 4 பேரும் நாகர்கோவிலில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை. இதையடுத்து விடுதி காப்பாளர் மாணவர்களை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் மாணவர்கள் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேசமணி நகர் போலீசில் விடுதிக்காப்பாளர் ஆரோக்கிய அருள்தாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மாணவர்கள் மாயமானது குறித்து நெல்லை மாவட்ட போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லையில் சுற்றித்திரிந்த 4 மாணவர்களையும் போலீசார் மீட்டனர். பின்னர் குமரி மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நேசமணி நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களை மீட்டு நாகர் கோவிலுக்கு அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பள்ளி விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததால் விடுதியை விட்டு வெளியேறியதாக தெரிவித்தனர். பெற்றோருடன் செல்வதாகவும் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட மாணவர்கள் பறக்கின் காலில் உள்ள அரசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இன்று மீண்டும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News