செய்திகள்
தொடர் மழையால் சேதமான நெற்பயிர்கள்.

செய்யாறு பகுதியில் தொடர் மழையால் 300 ஏக்கர் நெற்பயிர் சேதம்

Published On 2019-12-04 17:18 GMT   |   Update On 2019-12-04 17:18 GMT
செய்யாறு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் 300 ஏக்கர் நெற்பயிர் ஒன்றன் மீது ஒன்று சாய்ந்து போனது.

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வாழ்குடை, முக்கூர், மதுரை, பாராசூர் உள்ளிட்ட கிராமங்களில் முன் சம்பா பருவத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக செய்யாறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதில், தண்டு உறுதித்தன்மை இல்லாததால் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள், ஒன்றன்மீது ஒன்று பாய் விரித்தார்போல சாய்ந்து போனது. மேலும், அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்ததால், நீரில் மூழ்கி மண்ணில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைத்து நாற்றுகளாக மாற தொடங்கி விட்டன.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவழித்து நடவு செய்து, அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, முளைத்து போனது விவசாயிகளை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது.நெற்கதிர்கள் முற்றிய நிலையில் மண்ணில் சாய்ந்து மழைநீரில் மூழ்கி நாற்றுகளானதை கண்டு கண்ணீர் விடும் விவசாயிகள், மிஞ்சியிருக்கும் 40 சதவீத நெல்மணிகளையாவது சேமிக்க வேண்டி சேற்றில் இறங்கி அறுவடை செய்து வருகின்றனர். 

அதேபோல், பின் சம்பாவில் பயிரிட்டிருந்த நெற்பயிர்களும், பால்பிடிக்கும் தருவாயில் தண்டு உடைந்து சாய்ந்து போனது. நெல்மணிகளில் 80 சதவீதம் பால்பிடிக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களை பார்வையிட்டு, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News