செய்திகள்
திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க புதிய திட்டம்
அறிக்கையில் முதல் கட்டமாக தெரிவிக்கப்பட்ட கருத்து ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது.
திருப்பூர்:
தமிழக நகர்ப்புற உட்கட்டமைப்பு மேலாண்மையின் கீழ் திருப்பூர், அவிநாசி, பல்லடம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை மேற்கொள்வது குறித்து தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை பெறப்பட்டது.
அறிக்கையில் முதல் கட்டமாக தெரிவிக்கப்பட்ட கருத்து ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடந்தது.
இதில் மாநகராட்சி பொறியாளர்கள்,நகரமைப்பு பிரிவினர், நெடுஞ்சாலைத் துறையினர்,உள்ளூர் திட்டக் குழுமம், உள்ளாட்சி அமைப்பினர், போக்குவரத்து துறையினர்,போக்குவரத்து கழகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் அவிநாசி, திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையிலான ரோடுகளில் உள்ள சந்திப்பு பகுதிகள், பஸ் நிறுத்தம் அமைவிடம், சாலையில் வாகனங்களுக்கான ‘லேன்’முறை, இணைப்பு சாலைகள், ரிங் ரோடுகள் மேம்பாடு செய்தல், சாலைகள் செப்பனிடுதல் போன்ற முதல் கட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக கலெக்டர் தலைமையில் தொழில்துறையினர் மற்றும் பொது நல அமைப்பினர் பங்கேற்கும் வகையில் கூட்டம் நடத்தி இவற்றை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.