செய்திகள்
வீடு, வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானை
காட்டுயானை ஒன்று பிளாக்கவையை அடுத்த மணவயல் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் வீட்டை சேதப்படுத்தியது. மேலும் அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து வாழை, பலா உள்பட பல்வேறு மரங்களை சேதப்படுத்தியது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இவை அடிக்கடி குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களுக்குள் புகுந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு வந்த காட்டுயானை ஒன்று பிளாக்கவையை அடுத்த மணவயல் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் வீட்டை சேதப்படுத்தியது. மேலும் அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து வாழை, பலா உள்பட பல்வேறு மரங்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், குடியிருப்புக்குள் காட்டுயானைகள் வராமல் விரட்ட ஏற்பாடு செய்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.