செய்திகள்

தமிழகத்தில் 57 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டது- ப.சிதம்பரம்

Published On 2018-07-08 06:36 GMT   |   Update On 2018-07-08 06:36 GMT
பொருளாதாரம் மோசமானதால் தமிழ்நாட்டில் மட்டும் 57 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PChidambaram
நாசிக்:

மராட்டிய மாநில காங்கிரஸ் சார்பில் நாசிக்கில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய சூழல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பேசியதாவது:-

பா.ஜனதா மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. முதலீட்டு நடவடிக்கைகள் முடங்கி போய்விட்டன.


கடந்த 4 ஆண்டுகளில் 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக பா.ஜனதா அரசு கூறுவது சுத்த பொய். லட்சக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்து உள்ளனர் என்பதே உண்மை.

பொருளாதார நெருக்கடி நிலையால் தமிழ்நாட்டில் மட்டும் 57 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளனர்.

இதற்கு தீர்வு காண வேண்டிய பிரதமரும், மத்திய மந்திரிகளும் அதுபற்றி பேசாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மக்களை அடித்து கொல்லும் கும்பலில் உள்ளவர்கள் கூட வேலை இல்லாதவர்கள்தான்.

பிரணாப் முகர்ஜி மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஜி.எஸ்டி.யை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதாவினர் தற்போது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து பெருமைப்பட பேசி வருகின்றனர்.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார். #Congress #PChidambaram
Tags:    

Similar News