தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-12-03 05:11 GMT   |   Update On 2021-12-03 05:11 GMT
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 13 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் நேற்று காலை 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 9 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 13 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த 14-ந் தேதி முதல் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி இன்றும் அணையில் இருந்து காவிரியில் 13 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் கடந்த 20 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரை 24 மணி நேரமும் அணைக்கு அருகே உள்ள கட்டுப்பாட்டறையில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News