செய்திகள்
விவசாய சங்க தலைவர்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்களது போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

Published On 2021-01-12 12:40 GMT   |   Update On 2021-01-12 12:40 GMT
உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடைவிதித்த போதிலும், போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. இதுகுறித்து ஆலோசித்த 32 விவசாய சங்கங்களின் தலைவர்கள் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

‘‘நாங்கள் எந்தவொரு குழுவின் முன் ஆஜராகமாட்டோம் என நேற்றே தெரிவித்திருந்தோம். மத்தியஸ்தராக உச்சநீதிமன்றம் அமைக்கும் எந்தவொரு கமிட்டியையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களது போராட்டம் வழக்கம்போல் தொடரும். குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அரசுக்கு ஆதரவாகவும், அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கும் ஆதரவாக உள்ளவர்கள்’’ என்று பாரதிய கிஷான் யூனியன் தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.

முன்னதா, டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை எனக் கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

அந்த வழக்குகளை மொத்தமாக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

இந்த வேளாண் சட்டங்கள் செல்லுபடியாகுமா? என்பது குறித்தும், போராட்டத்தால் மக்களின் உயிரை பாதுகாப்பது, மக்களின் உடைமைகளை பாதுகாப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.

எங்களுக்கு உள்ள அதிகாரத்தின் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயற்சிப்போம். இந்த சட்டத்தை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த குழு எங்களுக்கானது. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த குழுவில் பங்கேற்கலாம். இந்த குழு எந்த உத்தரவுமோ அல்லது தண்டனையோ விதிக்காது. இந்த குழு எங்களிடம் அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கும்.

இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விவரம் அறியவே இந்த குழு அமைத்துள்ளோம். பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள குழுவை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். தொடர்ந்து போராட வேண்டுமென விவசாயிகள் நினைத்தால் அவர்கள் போராடிக்கொள்ளலாம்.

இந்த குழு இந்த வழக்கில் ஒரு அங்கம். வேளாண் சட்டங்களை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன்படி மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.    
என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிகழ்வு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News