ஆன்மிகம்
கன்னியாகுமரியில் இருந்து பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரை சென்ற போது எடுத்த படம்.

கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை

Published On 2021-02-23 07:36 GMT   |   Update On 2021-02-23 07:36 GMT
கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடியுடன் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவில், மறக்குடி தெருவில் உள்ள சுப்ரமணியசாமி, கோவில் வடக்கு தெருவில் உள்ள ப்ரானோபகாரி தர்ம மடம் முருகன்கோவில், கலைஞர்குடியிருப்பில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் ஆகிய 4 கோவில்களில் காவடி கட்டு விழா நடந்தது.

இந்த கோவில்களில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னீர்காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன்பிறகு இந்த 4 காவடிகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த பக்தர் ஒருவர் பரசுராமர் விநாயகர் கோவிலில் வைத்து அலகு குத்தி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பாதையாத்திரை அஞ்சுகிராமம், கூடன்குளம், நவ்வலடி, திசையன்விளை, உடன்குடி, தட்டார்மடம் வழியாக திருச்செந்தூர் சென்று அடைகிறார்கள்.

வழிநெடுகிலும் பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் செந்திலாண்டவர் பாதயாத்திரை குழு சார்பில் இலவச உணவும் வழங்கப்படுகிறது. இந்த பாதயாத்திரை திருச்செந்தூர் சென்றடைந்ததும் அங்கு காவடியில் எடுத்து செல்லும் பன்னீரால் முருகனுக்கு அபிஷேகம் நடத்துகிறார்கள்.

பின்னர் அவர்கள் பச்சை சாத்து தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார்கள். அதே வழியாக மீண்டும் 26-ந்தேதி காலையில் கன்னியாகுமரி வந்து அடைகிறார்கள்.

கன்னியாகுமரிக்கு வரும் காவடியை விவேகானந்தபுரம் சக்கர தீர்த்தம் காசி விஸ்வநாதர் கோவில் முன்பு இருந்து மேளதாளம் முழங்க வரவேற்று அந்தந்த கோவிலுக்கு அழைத்து வருகிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு இடும்பன் பூஜை நடக்கிறது. அன்னதானமும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.
Tags:    

Similar News