செய்திகள்
கைது

வெள்ளிச்சந்தை அருகே காரில் ரே‌ஷன் அரிசி கடத்தல்- 3 பேர் கைது

Published On 2021-09-30 10:02 GMT   |   Update On 2021-09-30 10:02 GMT
வெள்ளிச்சந்தை அருகே காரில் ரே‌ஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம்:

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக பறக்கும்படை போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளிச்சந்தை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை முட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக கார் ஒன்று வேகமாக சென்றது. அதனை தடுத்து நிறுத்திய போலீசார் அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் களியக்கா விளையை சேர்ந்த வினோ (வயது 44), மடிச்சல் பகுதியை சேர்ந்த சிவ இளங்கோ (33), மருதங்கோடு செம்மனூர் பகுதியை சேர்ந்த கிளைமென்ட் (25) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் ஓட்டி வந்த காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 1,000 கிலோ ரே‌ஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் கைப்பற்றினர். விசாரணையில் ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரே‌ஷன் அரிசி கடத்திய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News