செய்திகள்
கொலை

ஆலங்குளம் அருகே இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை- முதல் கணவர் வெறிச்செயல்

Published On 2021-07-22 07:18 GMT   |   Update On 2021-07-22 07:18 GMT
ஆலங்குளம் அருகே இன்று பட்டப்பகலில் இளம்பெண்ணை சரமாரி வெட்டிக்கொன்ற முதல் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ், தொழிலாளி.

இவரது மனைவி மகாலட்சுமி என்ற சங்கீதா (வயது25). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இன்று காலை பொன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சங்கீதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவரை வெட்டிய வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். பொதுமக்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது சங்கீதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

கொலை குறித்து வீரகேரளம்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் சங்கீதாவை கொலை செய்தது அவரது முதல் கணவர் கண்ணன் (29) என்பது தெரியவந்தது. சங்கீதாவுக்கு அம்பை அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 2 மாதத்திலேயே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் சென்றுள்ளது. இருவரும் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு பிரிந்து சென்றுள்ளனர். அதன் பிறகு சங்கீதா அம்பை அருகே உள்ள அருணாச்சலபுரத்தில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பொன்ராஜூடன் திருமணம் நடைபெற்று உள்ளது.

இதை அறிந்த கண்ணன் ஆவேசம் அடைந்துள்ளார். அவர் சங்கீதாவை தீர்த்து கட்ட முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்படி இன்று காலை மோட்டார் சைக்கிளில் அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டு கல்லூத்துக்கு வந்துள்ளார். அங்கு ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது.

அங்கிருந்தவர்களிடம் சங்கீதா வீடு எது என கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் நீங்கள் யார்? எதற்காக கேட்கிறீர்கள்? என விசாரித்துள்ளனர்.

அதற்கு கண்ணன், நான் அவரது உறவினர். திருமண பத்திரிகை கொடுப்பதற்காக வந்துள்ளேன் என கூறி உள்ளார். இதை நம்பி அவரது வீட்டை காட்டி உள்ளனர். வீட்டில் சங்கீதா தனியாக இருப்பதை கண்ட கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து தப்பி ஓடிய கண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News