செய்திகள்
கோப்புபடம்

உள்ளீட்டு வரி மானியத்தை விடுவிக்க திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

Published On 2021-10-22 05:14 GMT   |   Update On 2021-10-22 05:14 GMT
சுங்கம் மற்றும் மறைமுக வரி இனங்கள் வாயிலாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உள்ளீட்டு வரி மானிய தொகையை மாதந்தோறும் வழங்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்:

உள்ளீட்டு வரி மானியத்தை விடுவித்து, இக்கட்டில் இருந்து பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டுமென ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சார்பில் சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் மத்திய வாரிய தலைவர் அஜித்குமாருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சுங்கம் மற்றும் மறைமுக வரி இனங்கள் வாயிலாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உள்ளீட்டு வரி மானிய தொகையை மாதந்தோறும் வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நிலுவையில் உள்ள தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும்.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பல்வேறு சவால்களை நேர் கொண்டுள்ளன. கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டிய நிதிச்சுமை போன்ற காரணங்களால் தொழில்துறையினர் பல்வேறு சோதனையை சந்திக்க வேண்டியுள்ளது. இக்கட்டான இந்நிலையை சமாளிக்க ஏதுவாக  நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும்.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சேர வேண்டிய உள்ளீட்டு வரி மானிய தொகையை  உடனடியாக விடுவித்து இக்கட்டான நிலையில் இருந்து பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News