செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

செங்கோட்டை அருகே மனைவி-மகனை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2019-12-03 06:56 GMT   |   Update On 2019-12-03 06:56 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வறுமை காரணமாக மனைவி மற்றும் மகனை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எல்லாரைமுத்து. இவரது மகன் கந்தசாமி (வயது35). இவருக்கு இந்துமதி (28) என்ற மனைவியும், மித்ரன் (6) மற்றும் மூர்த்தி (2) என்ற 2 மகன்களும் உள்ளனர். கந்தசாமி ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கந்தசாமி மிகவும் வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதையடுத்து இன்று வெகுநேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து புளியரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கோட்டை போலீசார் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது கந்தசாமி, அவரது மனைவி இந்துமதி, மூத்த மகன் மித்ரன் ஆகியோர் பிணமாக கிடந்தனர். 2-வது மகன் மூர்த்தி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தான். சிறுவன் மித்ரனின் கழுத்தில் துண்டு இறுக்கி கட்டப்பட்டிருந்தது. இதனால் மனைவி, மகனை கொன்று கந்தசாமி தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கந்தசாமியின் வீட்டு சுவற்றில் கடன் மற்றும் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News