செய்திகள்
ஊதிய குறைப்பை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் 21-ந்தேதி ஆர்ப்பாட்டம்
நாள் ஒன்றுக்கு ரூ.391 ஊதியமாக வழங்கினால் போதும் என்று தமிழக அரசின் நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பூர்;
திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளியில் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி., தலைவரும், திருப்பூர் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தமிழகத்தில் உள்ளாட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
ஆனால் அதில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே வழங்கும் வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை 2017ம் ஆண்டு தமிழக அரசு நிர்ணயித்தது. இதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.693.42 ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
இதனையும் குறைத்து நாள் ஒன்றுக்கு ரூ.391 ஊதியமாக வழங்கினால் போதும் என்று தமிழக அரசின் நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். துப்புரவு தொழிலாளர்களின் ஊதியத்தை பாதியாகக் குறைத்தது கண்டிக்கத்தக்கதாகும்.
ஆகவே இந்த உத்தரவை திரும்பப் பெற்று அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கக் கோரி மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முன்பாக வரும் 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.