செய்திகள்
ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published On 2021-10-14 08:42 GMT   |   Update On 2021-10-14 08:42 GMT
50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரெயில்வே போலீசாரின் செயலை கண்டித்து, ஆவடி ரெயில் நிலையத்தில் அந்த மின்சார ரெயிலை மறித்து தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி:

சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி நேற்று மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அதில் கல்லூரி மாணவர்கள் உள்பட பொதுமக்கள் பயணம் செய்தனர். அண்ணனூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் ஏறிய ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர், ரெயிலில் இருந்த சென்னை மாநில கல்லூரி மாணவர்களில் ஒருவரது பையை சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

அந்த பையில் சுமார் 10 முதல் 15 எண்ணிக்கையில் ரெயில் தண்டவாளத்தில் இருக்கும் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆவடி ரெயில் நிலையம் வந்ததும், அந்த மாணவரை ரெயிலில் இருந்து கீழே இறக்கி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார். இதனால் ஆத்திரமடைந்த சகமாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், ரெயில்வே போலீசாரின் இந்த செயலை கண்டித்து, ஆவடி ரெயில் நிலையத்தில் அந்த மின்சார ரெயிலை மறித்து தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆவடி ரெயில்வே போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் அந்த மாணவரையும் அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு ரெயிலில் ஏறி பயணம் செய்தனர். இதனால் சுமார் அரை மணிநேரம் அந்த மின்சார ரெயில் தாமதமாக அரக்கோணம் புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News