செய்திகள்

காலே டெஸ்ட்- இங்கிலாந்து சுழலில் சிக்கி இலங்கை 203 ரன்னில் சுருண்டது

Published On 2018-11-07 10:56 GMT   |   Update On 2018-11-07 10:56 GMT
காலேயில் நடைபெற்று வரும் டெஸ்டில் இங்கிலாந்தின் அபார பந்து வீச்சால் இலங்கை முதல் இன்னிங்சில் 203 ரன்னில் சுருண்டது. #SLvENG
இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் 46 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 35 ரன்களும் சேர்த்தனர். ரோரி பேர்ன்ஸ் (9), மொயீன் அலி (0), பென் ஸ்டோக்ஸ் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் 38 ரன்கள் சேர்க்க அறிமுக விக்கெட் கீப்பரான பென் போக்ஸ் சதம் விளாசினார். அவர் 107 ரன்களும், ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் 48 ரன்களும் அடிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.



பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்னே, குஷால் சில்வா ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கருணாரத்னே 2-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். குஷால் சில்வா 1 ரன் எடுத்த நிலையில் சாம் குர்ரான் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 10 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

அதன்பின் சுழற்பந்து வீச்சாளர்களான மொயீன் அலி, ஜேக் லீச் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுக்களை சாய்த்தனர். தனஞ்ஜெயா டி சில்வா 14 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும் வெளியேறினார்கள்.



மேத்யூஸ் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 52 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இலங்கை 203 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மொயீன் அலி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மற்ற சுழற்பந்து வீச்சாளர்களான அடில் ரஷித், லீச் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இலங்கை முதல் இன்னிங்சில் 139 ரன்கள் பின்தங்கியுள்ளது. 139 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 
Tags:    

Similar News