செய்திகள்
பூந்தமல்லி அருகே பழைய வீட்டை இடித்தபோது சுவர் சரிந்து தொழிலாளி பலி
பூந்தமல்லி அருகே பழைய வீட்டை இடித்தபோது சுவர் சரிந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த அகரமேல் சம்பத்நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட முடிவு செய்தார்.
இதற்காக பழைய வீட்டை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இதில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ரவி (48) உள்பட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று மாலை வீட்டை இடித்த போது அங்கிருந்த சுவர் திடீரென சரிந்து தொழிலாளி ரவி மீது விழுந்தது.
இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரவி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நசரத்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டு உரிமையாளர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.