செய்திகள்
கோப்புபடம்

திருப்பத்தூர் அருகே போலீஸ் தடையை மீறி நடந்த மஞ்சுவிரட்டு: 10-க்கும் மேற்பட்டோர் காயம்

Published On 2021-07-16 12:06 GMT   |   Update On 2021-07-16 12:06 GMT
திருப்பத்தூர் அருகே கொரோனா ஊரடங்கு தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்ததை அடுத்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே புகழ்பெற்ற பெரிச்சி கோவில் உள்ளது. இங்கு ஒற்றை சனீஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றது.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி இரு நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் இந்தாண்டும் திருவிழா நடைபெறவில்லை. கோவில் திருவிழாவின் போது ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறும்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவால் மஞ்சுவிரட்டு நடக்கவில்லை.

போலீசார் ஊர் பெரியவர்களிடம் மஞ்சு விரட்டு நடத்த தடை உள்ளது என கூறிய நிலையில் இளைஞர்கள் இணைய வழி மூலம் இன்று மஞ்சு விரட்டு நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

இதையறிந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ஏராளமான மஞ்சுவிரட்டு காளைகள் அழைத்து வரப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மஞ்சுவிரட்டை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை தந்தவர்களை போலீசார் தடுத்தாலும் வேறு வழிகளில் சென்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொரோனா ஊரடங்கு தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்ததை அடுத்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News