ஆன்மிகம்
பெருவுடையார், பெரியநாயகி அம்மன்

மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா: பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம்

Published On 2021-11-10 07:52 GMT   |   Update On 2021-11-10 07:52 GMT
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடத்தப்படுகிறது.
தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினார். இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் கம்பீரமாக காட்சிஅளிக்கிறது.இந்த கோவில் இந்திய அரசின் கட்டுப்பாட்டில்உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

இந்த கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஒவ்வொருஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 2 நாட்கள் விழா நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு 1 நாள் மட்டும் கொண்டாடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும் 1036-வதுசதய விழா வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) 1 நாள் கொண்டாடப்படுகிறது.

இது குறித்து சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா வருகிற 13-ந்தேதி காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 7 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம்ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்குகிறது. 7.30 மணிக்கு திருமுறை திருவீதி உலா கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. 8.50 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 1மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தேவாரன இன்னிசை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. என்றார். பேட்டியின் போது உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில்செயல் அலுவலர் மாதவன் மற்றும் சதய விழாக்குழுவினர் உடன் இருந்தனர். சதய விழாவையொட்டி கோவிலில் மின் விளக்கு உள்ளிட்ட அலங்கார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News