கழிவறை என தவறாக நினைத்து ஓடும் ரெயிலில் கதவை திறந்த சிறுவன் கீழே விழுந்து பலி
கோட்டையம்:
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், மாம்பாடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவர் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சுவேலி-நிலம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மலப்புரம் திரும்பி கொண்டிருந்தார்.
நள்ளிரவு 12.30 மணி அளவில் கோட்டையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரெயில் வந்து கொண்டு இருந்தபோது சித்திக்கின் 10 வயது மகன் முகமது இசான் ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து பலியானான்.
சிறுவன் கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றான். அவன் திரும்பி வராததைத் தொடர்ந்து அவனை தேடினர். அப்போதுதான் கழிவறை கதவு என தவறாக நினைத்து வெளிக்கதவை திறந்து சிறுவன் கீழே விழுந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர்கள் ரெயிலை சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரெயில் தண்டவாளம் அருகே தங்கியிருந்தவர்கள் அந்த பகுதியில் தேடியபோதுதான் சிறுவன் முகமது இசான் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டின் கீழ் கிடந்தான்.
உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுவனின் உயிரை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.