கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை
சென்னை:
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களின் உயிர்களை காத்திட தமிழக அரசும், மருத்துவமனைகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் அல்லும் பகலும் அயராது தம் உயிரைத் துச்சம் என மதித்து அரும்பணியாற்றி வருகின்றனர்.
அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் இவ்வாறு அயராது பணியாற்றி வரும் அனைவருடனும் தமிழக அரசு தோளோடு தோள்நின்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
இவ்வாறு களப்பணியாற்றி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும் பணிபுரிந்து வருபவர்களை ஊக்கப்படுத்த ஊக்கத் தொகையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில நோயாளிகள் உயிர் இழக்க நேரிடும் போது மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை அந்நோயாளிகளின் உறவினர்கள் தாக்கி உள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது.
மருத்துவமனைகளில் உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தருணங்களில் உயிர் இழப்பு தவிர்க்க இயலாததாகிறது. இச்சூழலில் உணர்ச்சி வசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனைப் பணியாளர்களிடமும் தரக்குறைவாக நடந்து கொள்வது அவர்கள் ஆற்றி வரும் சேவையை இழிவு படுத்துவதாக அமையும்.
இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கூறியவாறு மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் பெரும் சேவை செய்து வரும் நிலையில், ஒரு சில மருத்துவமனைகள் இப்பேரிடர் சூழலைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் கேட்பதாகவும் சில செய்திகள் வந்துள்ளன.
மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதிக்காது அவர்களின் நற்பணி தொடர்ந்திட உறுதுணையாக இருக்கக் கூடிய அதே நேரத்தில், பொதுமக்களிடம் அதிக கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது.
தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி இந்த மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.