செய்திகள்
முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.200 வீதம் மொத்தம் 11 நபருக்கு ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சியில் இருந்து தூத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக திடீர் ஆய்வு நடைபெற்றது. இதில் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.200 வீதம் மொத்தம் 11 நபருக்கு ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பலர் உடனிருந்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் 4 ரோடு பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கின்றனரா? முககவசம் அணிந்து வருகின்றனரா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜெயங்கொண்டம் கடைவீதியில் மோட்டார் சைக்கிள்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து விதிமுறைகளை மீறியதாக கூறி 7 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.1400 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சமூக இடைவெளி கடைபிடிக்கவும், முககவசம் அணியவும், கைகளைக் கிருமி நாசினி கொண்டு கழுவவும் அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.