ஆன்மிகம்
தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளிய போது எடுத்தபடம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் தங்க குதிரையில் வையாளி கண்டருளிய நம்பெருமாள்

Published On 2021-01-02 08:59 GMT   |   Update On 2021-01-02 08:59 GMT
ஸ்ரீரங்கம் ரெங்காநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெற்றது. அப்போது தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த மாதம் 25-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது.

ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோவில் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார்.

அங்கு இரவு 7 மணிமுதல் இரவு 8 மணிவரை அரையர் சேவையுடன், பொதுஜனசேவையும் நடைபெற்றது. இரவு9 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் 10-ம் திருநாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியும், 4- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News