செய்திகள்
வேரோடு சாய்ந்த புளியமரத்தை தீயணைப்பு நிலைய வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்திய போது எடுத்த படம்.

சீர்காழி ரெயில்வே ரோட்டில் புளியமரம் வேரோடு சாய்ந்தது

Published On 2021-04-17 15:27 GMT   |   Update On 2021-04-17 15:27 GMT
சீர்காழி ரெயில்வே ரோட்டில் புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி:

சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் விட்டுவிட்டு பெய்து வரும் தொடர் மழையால் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், எடமணல், கொள்ளிடம், கற்கோவில், கதிராமங்கலம், எடப்பாடி வடபாதி, காரைமேடு, அட்டகுளம், நயினார்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சீர்காழி ரெயில்வே ரோட்டில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

இதனால் சீர்காழி பனங்காட்டான்குடி இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் சாய்ந்து கிடந்த புளியமரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
Tags:    

Similar News