சின்னமனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, ஓடைப்பட்டி, குச்சனூர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது சொத்து பத்திரங்களை பதிவு செய்தும் வில்லங்கங்களை தெரிந்து கொள்ளுதல் மற்றும திருமண பதிவுகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் கீதா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தாஜூதீன் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கணக்கில் வராத ரூ.1½ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அங்குள்ள முக்கிய ஆவணங்களை போலீசார் சோதனை செய்ததுடன் அலுவலர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.
தீபாவளிக்கு முன்புதான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கள் அரசு அலுவலங்களில் சோதனைக்கு வருவார்கள் என்று நினைத்த நிலையில் தீபாவளி முடிந்த பிறகும் அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.