செய்திகள்
மத்திய அரசின் ‘பாரத் மாலா பிரயோஜனா’ திட்டத்தில், பொள்ளாச்சி-திண்டுக்கல்-கமலாபுரத்தை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக ரூ. 3,649 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
உடுமலை:
பொள்ளாச்சி-முதல் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வரை 50.07 கி.மீ., மடத்துக்குளம்-ஒட்டன்சத்திரம் 45.38 கி.மீ., ஒட்டன்சத்திரம்-கமலாபுரம், 36.51 கி.மீ., என 131.96 கி.மீ., தூரம் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக கிராமப்பகுதிகளில் மண் கொட்டப்பட்டு மேடாக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு ஒரு சில பகுதிகளில் தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பொள்ளாச்சி ரோடு, கணபதிபாளையம் பிரிவு அருகே பிரதான சாலையுடன் இணைப்பு சாலை அமைக்க சாலையோரத்தில் இருந்த 150 ஆண்டு பழமையான புளிய மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.
எனவே இம்மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு பதில் பசுமை அமைப்புகளுடன் இணைந்து வேருடன் அகற்றி மறு நடவு செய்யவும், அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில் அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கவும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.