உள்ளூர் செய்திகள்
பலியான பேச்சிமுத்து

கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்த வாலிபர் பலி-உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Published On 2022-01-11 11:18 GMT   |   Update On 2022-01-11 11:18 GMT
பாளையில் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது சாவுக்கு நீதி கேட்டு அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

பாளை அரியகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது28). கூலித் தொழிலாளி. 

இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது மனைவி பாளை தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் கடந்த 19-ந்தேதி போலீசார்  இருவரையும் அழைத்து சமாதானம் பேசியுள்ளனர்.  பின்னர் வெளியே வந்த பேச்சிமுத்து போலீஸ் நிலையத்தில் வைத்து விஷம் குடித்துள்ளார். 

உடனே அவரை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இறந்தார்.

இதற்கிடையே பேச்சிமுத்து விஷம் குடித்த அன்றே அவரது சட்டை பையில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதமும் இருந்துள்ளது. அதில் என் மரணத்திற்கு காரணம் என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் என எழுதி இருந்தார். 

இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த பேச்சிமுத்துவின் உறவினர்கள் அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News