ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் தாயார் திருவடி சேவை

Published On 2020-09-24 06:36 GMT   |   Update On 2020-09-24 06:36 GMT
இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர்.

சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது. அங்கிருந்து இரவு 8 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். திருவடி சேவையையொட்டி தாயார் சாய்கொண்டை, வைர பதக்கம், பவளமாலை, கிளி மாலை, கையில் தங்கக்கிளி, காலில் தங்க கொலுசு அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News