செய்திகள்
கோப்புப்படம்

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் கார் புகுந்து 5 பேர் பலி- 40 பேர் படுகாயம்

Published On 2021-11-22 09:00 GMT   |   Update On 2021-11-22 09:00 GMT
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் கார் புகுந்ததில் குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் விஸ்கான் சிங் மாகாணத்தில் உள்ள வாகேஸ்ஷா நகரில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி கத்தோலிக்க சபை சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதில் 70 பேர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் முன்னே நடந்து வர குழந்தைகள் ஆடி-பாடி நடனம் ஆடியபடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக கார் ஒன்று வந்தது. ஊர்வலம் நடந்த பாதையில் வாகனம் சென்று விடாமல் தடுக்க வேலிகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதை உடைத்துக் கொண்டு அந்த ஊர்வலத்துக்குள் கார் பாய்ந்தது.

இதில் குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இதுபற்றி போலீஸ் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கார் தடுப்பு வேலியை தாண்டி வந்தபோது அங்கிருந்த போலீசார் அதை நிறுத்தும்படி கூறினார்கள். ஆனாலும் அதை மீறி பாய்ந்ததால் துப்பாக்கியால் காரை நோக்கி பல தடவை சுட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கார் டிரைவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News