செய்திகள்
டிக் டாக்

டிக்-டாக் நட்பால் கர்ப்பமான மாணவி தீக்குளித்து தற்கொலை: வாலிபர் போக்சோவில் கைது

Published On 2020-01-14 05:51 GMT   |   Update On 2020-01-14 05:51 GMT
திருப்பூர் அருகே டிக்-டாக் நட்பால் கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்:

சமூக வலைதளமான பேஸ்புக், வாட்ஸ்அப், டிக்-டாக் போன்றவைகள் கருத்துகளை சுதந்திரமாக பரிமாறவும், திறமைகளை வெளிப்படுத்தவும் கிடைத்த வரபிரசாதமாகும். ஆனால் இது கூர்மையான இருபுற ஆயுதம்போன்றது. சில நேரங்களில் வைத்திருப்பவர்களையே கொன்று விடுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி டிக்-டாக்கில் ஆடிப்பாடி அதிக நேரம் செலவிட்டார். இவரின் வீடியோ பதிவை பாராட்டி பல லைக், கமாண்ட்கள் வந்தன. இதனால் உற்சாகம் அடைந்த மாணவி மேலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்தார்.

இவரது டிக்-டாக் வீடியோவை பார்த்த பல்லடம் செலக்கரச்சலை சேர்ந்த வேல்முருகன் என்பவர் அடிக்கடி பார்த்து லைக், கமாண்ட் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் வேல்முருகன் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கினார்.

செல்போன் எண் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு காதல் வார்த்தைகளை அள்ளித்தெளித்தார். இதில் மாணவி மயங்கினார். இதனை பயன்படுத்திய வேல்முருகன் மாணவியிடம் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார்.

மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் இது குறித்து கேட்டனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் பற்றி எரிந்ததும் அலறி சத்தம்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவி மீது பற்றி எரிந்த தீயை அணைத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து காங்கயம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் டிக்-டாக்கால் சீரழிந்த விபரத்தை கூறினார். இந்நிலையில் 27-ந்தேதி சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். வேல்முருகனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில் பலியான மாணவியின் பெற்றோர் நேற்று திருப்பூர் கலெக்டரை சந்தித்து சமூகத்தை சீரழிக்கும் டிக்-டாக்கை தடை செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர். மேலும் அந்த மனுவில் எனது மகள் சாவுக்கு காரணமான வேல்முருகன் ஜாமீனில் வெளியே வந்தால் எங்களை மிரட்ட வாய்ப்புள்ளது. எங்கள் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

அவருக்கு உரிய தண்டணை பெற்றுத்தரவேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

இது குறித்து பெற்றோர் கூறும்போது, செல்போன் மூலமாக பாடம் படிக்க வேண்டும் என்று கேட்டதால் மகளுக்கு கூலி வேலை செய்து செல்போன் வாங்கி கொடுத்தோம். அந்த செல்போனே மகளின் உயிரை பறித்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினர்.

Tags:    

Similar News