செய்திகள்
எடியூரப்பா

3 நாள் சுற்றுப்பயணமாக முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி சென்றார்

Published On 2020-09-18 01:40 GMT   |   Update On 2020-09-18 01:40 GMT
3 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் மந்திரி சபை விரிவாக்கம் பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. 34 உறுப்பினர்களை கொண்ட மந்திரிசபையில் தற்போது 28 பேர் உள்ளனர். இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருந்தார். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக மந்திரிசபை விஸ்தரிப்பு ஒத்திவைக்கப்பட்டது. பா.ஜனதா மேலிட தலைவர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தும்படி எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டனர். இதனால் மந்திரி பதவி கனவில் இருந்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்த்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. முக்கிய பங்காற்றிய எச்.வி.ஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் மற்றும் ஆர்.சங்கர் ஆகியோருக்கு பா.ஜனதா எம்.எல்.சி. பதவி வழங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

மந்திரிசபையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் எம்.எல்.சி.க்கள் எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் மற்றும் ஆர்.சங்கர் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்படுவது உறுதி என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் எச்.விஸ்வநாத் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்தும், எம்.டி.பி.நாகராஜ் ஆர்.சங்கர் ஆகிய 2 பேரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தது.

அவர்கள் 3 பேர் தவிர சி.பி.யோகேஷ்வர் எம்.எல்.சி., அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை மந்திரிசபையை மாற்றி அமைத்தால், பல புதிய முகங்களுக்கு மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மந்திரிசபையை மாற்றி அமைத்தால், தங்களின் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் சில மந்திரிகள் உள்ளனர். அதாவது சரியாக செயல்படாத சில மந்திரிகளை நீக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் விவாதிக்க முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் குறித்து அவர் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் மந்திரிசபை விஸ்தரிப்புக்கு ஒப்புதல் பெற உள்ளார்.

அதுபோல் கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதி ஒதுக்க கோரி அவர் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து பேசுகிறார். குறிப்பாக ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி பிரதமர் மோடி, மத்திய ஜல்சக்தி மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளார். எடியூரப்பா இந்த பயணத்தை முடித்துவிட்டு 19-ந்தேதி இரவு பெங்களூரு திரும்புகிறார். அதன் பின்னர் கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் பற்றிய தகவல் வெளியாகும் என்றும், அநேகமாக 20-ந்தேதி மந்திரி சபை மாற்றி அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி செல்வதற்கு முன்பு முதல்-மந்திரி எடியூரப்பா கலபுரயில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் இங்கிருந்து நேரடியாக டெல்லி செல்கிறேன். அங்கு நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினமும் (சனிக்கிழமை) 2 நாட்கள் இருப்பேன். பிரதமர் மோடி, 8 மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து பேச அனுமதி பெற்றுள்ளேன். கர்நாடகத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்க உள்ளேன். மேலும் எங்கள் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன். வருகிற 19-ந் தேதி கர்நாடகம் திரும்புகிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

வருகிற 21-ந் தேதி சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூருவில் தொடங்குகிறது. அதற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலர் டெல்லி சென்று தங்களுக்கு மந்திரி பதவி ஒதுக்குமாறு மேலிட தலைவர்களிடம் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
Tags:    

Similar News