செய்திகள்
மரத்தில் கார் மோதி டாக்டர் உள்பட 2 பேர் பலி
தேன்கனிக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் டாக்டர் உள்பட 2 பேர் பலியாகினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் மஞ்சுநாத் (வயது 22). டாக்டர். தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்ற இருந்தார். இவரும், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ரங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த பரத் (21), பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேதாந்து (21), பைபாஸ் சாலையை சேர்ந்த கோகுல் (22) ஆகிய 4 பேரும் நண்பர்கள்.
இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் காரில் பெங்களூருவுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் அவர்கள் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தேன்கனிக்கோட்டை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை கோகுல் ஓட்டி வந்துள்ளார்.
தேன்கனிக்கோட்டை தண்டரை அருகே கார் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பரத் மற்றும் டாக்டர் மஞ்சுநாத் இருவரும் பரிதாபமாக இறந்தனர். கோகுல், வேதாந்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.