செய்திகள்
குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவன மேலாளர் கார் மோதி பலி
குருபரப்பள்ளி அருகே விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சின்னபாளேத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது30). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது மோட்டார்சைக்கிளில் இரவு ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது நிலை தடுமாறி, சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஸ்ரீதர் சாலையில் விழுந்தார்.
அப்போது அந்த வழியே பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, ஸ்ரீதர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.