செய்திகள்
மேச்சேரி ரோடு-மேட்டூர் அணை இடையே நேற்று அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

புதிதாக அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்

Published On 2020-09-29 04:42 GMT   |   Update On 2020-09-29 04:42 GMT
மேச்சேரி ரோடு-மேட்டூர் அணை ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் அதிவேகமாக ரெயிலை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சூரமங்கலம்:

சேலம்-மேட்டூர் அணை ரெயில் நிலையங்களுக்கு இடையே ஏற்கனவே அகல ரெயில் பாதை உள்ளது. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரெயிலும் மற்றும் மேட்டூர் அனல் மின்நிலையம், பொட்டனேரியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நிலக்கரி கொண்டு வர சரக்கு ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் வழித்தடத்தில் புதிதாக 2-வது அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக மேச்சேரி ரோடு ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டூர் அணை வரை 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டாவது அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்தது உள்ளன. இந்த வழிப்பாதையில் பணிகள் முடிவடைந்த மேட்டூர் அணை-மேச்சேரி ரோடு ரெயில் பாதையில் அதிவேக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் அதிவேக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய், சென்னை தலைமை பொறியாளர் ராம் கிஷோர், சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தண்டவாளத்தின் உறுதித்தன்மை மற்றும் ரெயில் வேகம் ஆகியவற்றை நவீன கருவி மூலம் தெரிந்து கொண்டனர்.

முன்னதாக மேச்சேரி ரோடு - மேட்டூர் ரெயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் ரெயில்வே பாதையை கடக்கவோ அல்லது அத்துமீறி தண்டவாள பகுதிக்கு வரவோ கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News