திமுகவுக்கு செல்வாக்கு பெருகுவதால் உதயநிதியை கைது செய்கின்றனர்- தங்கதமிழ்செல்வன் ஆவேசம்
உத்தமபாளையம்:
தேனி அருகே உள்ள பொட்டிபுரத்தில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ் செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவரது கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அ.தி.மு.க. அரசுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. எனவேதான் அவரது பிரசார பயணத்தை தடுக்கும் வகையில் உதயநிதியை கைது செய்து வருகின்றனர்.
நீதிமன்றம் தடை செய்யப்பட்ட வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால் மக்களை சந்தித்து அவரின் தவறுகளை சுட்டிக் காட்டினால் போலீசார் கைது செய்கின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நான் நல்லவர் என்று எனக்கு சான்று தர தேவையில்லை.
நான் எப்படிபட்டவன் என்பது தேனி மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே சிறந்த மாணவன் என்று பெயர் பெற்றவன். ஒரு சிலரை போல காலில் விழுந்து நடித்து அமைச்சராகவில்லை.
வருகிற சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.