செய்திகள்
கோப்பு படம்.

பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா

Published On 2020-10-14 12:24 GMT   |   Update On 2020-10-14 12:24 GMT
தர்மபுரியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார். மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த காஞ்சனா என்ற இளம்பெண்ணை பேஸ்புக் பழக்கம் மூலம் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காஞ்சனா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் பிரேத பரிசோதனை நேற்று தர்மபுரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை முன்பு அவருடைய உறவினர்கள் திரண்டனர். காஞ்சனாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உரிய விசாரணை அடிப்படையில் காஞ்சனாவின் மரணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து நேற்று இரவு காஞ்சனாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News