ஆன்மிகம்
ராஜகோபுரம் மூடப்பட்டு உள்ளதையும், ராஜகோபுரம் முன்பு பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டதையும் படங்களில் காணலாம்.

3 நாட்கள் தடை: அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு

Published On 2021-08-28 06:00 GMT   |   Update On 2021-08-28 06:00 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தடையால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி வாரத்தில் 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு வருகிறது.

கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை என பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி கோவில் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டன.

எனினும் கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன. பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ராஜகோபுரம் முன்பும், 16 கால் மண்டபத்தின் முன்பும் நின்று கற்பூரம் மற்றும் விளக்கேற்றி வழிபட்டனர்.

ஏராளமான பக்தர்கள் கோவிலின் வெளியில் நின்று சாமியை வணங்கி வழிபட்டனர். மேலும் தனித்தனியாக பக்தர்கள் கோவில் பின்புறம் உள்ள மலை சுற்றி கிரிவலம் சென்றனர்.

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி மாதம் தொடங்கியபின் நேற்று 6-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு சாலையில் வழிபாடு செய்தனர். வழக்கமாக ஆறாம் வெள்ளி திருவிழாவின் போது உற்சவ அம்மனுக்கு கமண்டல நதியில் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம். ஆனால் கொேரானா தொற்று கட்டுப்பாடு காரணமாக அம்மனுக்கு கோவில் வளாகத்தில் நேற்று தீர்த்தவாரி நடத்தி உட்பிரகார உலா நடந்தது.
Tags:    

Similar News