செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்வு

Published On 2018-11-04 11:10 GMT   |   Update On 2018-11-04 11:10 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை - நெல்லைக்கு ரூ. 2,250 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. #Diwali

சென்னை:

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (6-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம்.

இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவுகளும் முடிந்து விட்டது. ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

இதனால் தனியார் ‘ஆம்னி’ பஸ்களை பயணிகள் நாடி வருகிறார்கள். இந்த நிலையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் திடீரென கட்டணத்தை உயர்த்திவிட்டது.

சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை - நெல்லைக்கு ஏ.சி. சிலீப்பர் பஸ் டிக்கெட் கட்டணம் ரூ. 2,250, மதுரைக்கு பஸ் கட்டணம் ரூ. 1,100 முதல் ரூ. 1,500-ம், ஏ.சி. சிலீப்பக் பஸ் கட்டணம் ரூ. 1,800 முதல் ரூ. 2000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

சென்னை - பெங்களூர், கோவை, திருச்சிக்கு ரூ. 1,500 முதல் ரூ. 1,800, கன்னியாகுமரிக்கு ரூ. 2,000 முதல் ரூ. 2,500 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் திடீர் கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கு போதுமான அளவு சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட வேண்டும்.

தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு அதிகரித்து வசூலிக்கிறார்கள்.

சென்னை - நெல்லைக்கு டிக்கெட் கட்டணம் ரூ. 2,250 வசூலிப்பது வேதனையாக உள்ளது. தமிழக அரசு ஆம்னி பஸ்களில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும். முறை கேடாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Diwali

Tags:    

Similar News