திருப்பனந்தாள் அருகே ரேஷன் கடை அரிசியில் வண்டு, பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு
கும்பகோணம்:
திருப்பனந்தாள் அருகே வீராக்கன் மற்றும் பரவனூர், கூவனூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீராக்கன் கூட்டுறவு அங்காடியில் மாதந்தோறும் விலையில்லா 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியை வாங்க சென்று பொதுமக்கள் சென்றனர்.
இந்த நிலையில் குண்டு ரகத்தில் வழங்கப்படும் அரிசியில் கருப்பு வண்டு, சிறு வகை பூச்சிகள் மற்றும் தூசி போன்றவை இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது பற்றி அங்காடி ஊழியர் வெங்கடேசனிடம் கேட்டனர்.
அதற்கு அவர், குடோனிலிருந்து நேரடியாக வருவதால் நான் ஏதும் செய்ய முடியாது. கூட்டுறவு அங்காடி வழங்குவதை ஏற்றுக்கொள்ளவும் என்று கூறினார். இதற்கு குடும்ப அட்டைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டுறவு அங்காடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கூட்டுறவு ஊழியர் வெங்கடேசன் மேல் அதிகாரிகளின் தகவலின்படி, வினியோகம் செய்த விலையில்லா அரிசிகளை திரும்பி வாங்கி கொண்டு அதற்கு பதில் சன்ன ரக அரிசியை வழங்கினார். இதனால் சிறிது நேரம் பரபரபரப்பு நிலவியது.
பல்வேறு மக்கள் விலையில்லா அரிசியை வாங்கி சாப்பிடுவதால் இது போல் தரமில்லாத அரிசியை வட்ட வழங்கல் அதிகாரிகள் தர ஆய்வு செய்து வினியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.