ஆன்மிகம்
திருச்செந்தூரில் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை

Published On 2020-11-17 07:01 GMT   |   Update On 2020-11-17 07:01 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 2-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலையிலும் சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் உலா வந்தார். விழா நாட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 11.30 மணி வரையிலும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். முக்கிய நாட்களான 6, 7-ம் திருவிழா நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News